ராணுவ அதிகாரிகள் பணியமைப்பின் துணைத் தலைவரும், ஓய்வுபெற்ற பின் பாஜக-வில் சேர்ந்தவருமான ஜெனரல் சரத் சந்த் பிப்ரவரி, 2018-ல் தான் ஓய்வு பெற சில மாதங்களே இருந்த சூழலில் ஊடகங்களின் முன் தெரிவித்த கருத்துக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவ்வாறு நிலைக்குழுவின் முன் ஆஜராகி அளித்த சான்றறிக்கையில் “தற்சமயம் ராணுவத்தில் உள்ள 68 சதமான கருவிகள் மற்றும் ஆயுதங்கள் பழமையானவை என்றும் 24 சதமானம் மட்டுமே நடப்பு காலத்தைச் சேர்ந்தவை என்றும் எஞ்சியுள்ள 8 சதமானம் காட்சிக் கூடத்தில் வைக்கப்பட வேண்டியவை” எனவும் தெரிவித்தார்.
இதேபோல 2018-19 காலகட்டத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக இருந்தவரும் ராணுவத்தின் மேஜர் ஜெனரலாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின்பு உத்தர்கண்ட் மாநிலத்தின் பாஜக முதல்வராக இரண்டு முறை பதவி வகித்தவருமான ஓ.சி.கந்தூரியுடன் பணிபுரிந்த முன்னாள் உயர் அதிகாரி, பாஜக -I அரசு பதவியேற்ற பின்னர் 2016-ஆம் ஆண்டின் போது ராணுவத்திற்கான ஆயுதக் கொள்முதல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் முற்றிலுமாக மீறப்பட்டதாகவும் அவருடன் சந்தித்துக் கொண்ட பல கூட்டங்களில் வெளியுறவுத்துறை குறித்து தனது அதிருப்தியையும், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாதுகாப்புத்துறைக்கு கடிதங்கள் எழுதியுள்ள போதிலும், அவை கண்டு கொள்ளப்படவில்லை எனவும் கந்தூரி கவலையுடன் கூறிய விசயங்களை பதிவு செய்துள்ளார்.
அருண் ஜெட்லி இருந்தபோது
அருண்ஜெட்லி நிதியமைச்சராக இருந்த போது 2018 - 19-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்திற்காக அறிவிக்கப்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவசர காலப்பயன்பாடு மற்றும் அன்றைய தினம் முடிவு செய்யப்பட்ட 125 - திட்டங்களின் மூலம், ஆயுதங்களை நவீனமயமாக்குவதற்கு தேவையான நிதி ரூ. 29,033 – கோடி: ஒதுக்கீடு செய்ததென்னவோ ரூ. 21,338 – கோடி மட்டுமே. 2017-18 நிதியாண்டிலும் இதுதான் நிலைமை. பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் இருந்த போது பணமதிப்பு நீக்கம், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் - டீசல் விலையுயர்வு, பணவீக்கம் போன்ற காரணங்களால் ராணுவத்திற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு சாத்தியமல்ல என்று அன்றைய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி கைவிரித்து விட்டார்.
இந்த நிதிப்பற்றாக்குறையானது ஆயுதங்களின் பற்றாக்குறையில் மட்டுமல்ல... பாதுகாப்புத்துறை முழுவதிலுமே எதிரொலித்தது! நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின்படி பாதுகாப்புத்துறையின் மூன்று பிரிவுகளிலும் பட்ஜெட்டில் நவீனமயமாக்கத்திற்காக அறிவிப்பு செய்வதற்கும் அதன்படி நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் பெரும் இடைவெளி இருந்து வந்துள்ளது. குறிப்பாக 2020 - 21-ஆம் நிதியாண்டில் மட்டும் இதன் பற்றாக்குறையானது ஏறத்தாழ ரூ.60,000 கோடியாக இருந்த போதும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின் போது ராணுவத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில்எந்தப் பற்றாக்குறையும் நிலவவில்லை எனத் திரும்ப திரும்பக் கூறினார்.நிதியமைச்சகமானது பட்ஜெட்டில் குறைவான நிதியைஒதுக்கீடு செய்வதன் மூலம் தங்களது கைளை கட்டிப்போடுவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புலம்பினர். லடாக்பிரச்சனையில் சீனாவுடனான மோதல் துவங்குவதற்கு முன்பே கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.70,000 கோடிக்குமேல் 50-க்கும் மேற்பட்ட ஆயுதத் தயாரிப்புக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தன. அவை முன்னுரிமை அடிப்படையில் பாகிஸ்தானுடனான எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆயுதங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைக்கான தளமேடைகளுக்காகவும், விமானம் மற்றும் கப்பற்படைக்கே உரித்தான வழக்கமான போர் நடவடிக்கைகளுக்கான தளவாடங்கள் தயாரிப்பு சம்பந்தப்பட்டவையாகும் என்றும் இவையெல்லாம் கிடப்பில் போடப்பட்ட விஷயங்களாக உள்ளன என்றும் மேற்கண்டஅதிகாரிகள் அதிருப்தியுடன் தெரிவித்தனர்.
நவீன ரகத் துப்பாக்கிகள் இல்லையே
நவீனமயமாக்குவதில் மிகப்பலவீனமான அம்சமாகத் திகழ்வது நவீன ரக துப்பாக்கிகள் சம்பந்தப்பட்டவையாகும். குறிப்பாக 1990- காலகட்டத்தைச் சேர்ந்த உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ள ‘இன்சாஸ் ’ (INSAS)ரகத்துப்பாக்கிகள் விசயத்தில் ஒவ்வொருராணுவ வீரரும் மகிழ்ச்சியற்ற நிலையிலேயே உள்ளனர். ஏனென்றால், 2010-ஆம் ஆண்டிலேயே மேற்கண்ட இன்சாஸ் ரகத்துப்பாக்கிகள் ‘தாக்குதல் நடவடிக்கைக்கு தகுதியற்றது’ என ராணுவத்தால் அறிவிப்புச் செய்யப்பட்டுவிட்டது. தவிர உள்நாட்டுத் தயாரிப்பை விட செயல்திறன்மலிவான AK – 47 இ ரகத் துப்பாக்கிகளை பல்கேரியாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம் என்றும் ராணுவ அதிகாரிகள் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளனர்.ஆயுதங்களை நவீனமயமாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2011-ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் போது 45 மி.மீ குறுக்களவு கொண்ட 5.56 - கேலிபர் ரகத்துப்பாக்கிகளுக்குப் பதிலாக 39 மி.மீகுறுக்களவு கொண்ட 7.62 ரகத்தைச் சேர்ந்த 60,000 -கேலிபர் ரகத்துப்பாக்கிகளைத் தயார் செய்திட 40 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் 2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜகஅரசு பொறுப்பேற்ற பின்பு மேற்கண்டவற்றில் 4 நிறுவனங்களின் தயாரிப்புகளை ‘கள சோதனைக்குட்படுத்தி’ பரிசோதனைத் தோல்வி என அறிவிப்பு செய்யப்பட்டதன் பின்னணியில் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் 2015-ஆம் ஆண்டு மேற்கண்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்தார்.அதனை அவர் தொழில் நுட்பக் கோளாறு காரணங்களுக்காக இன்றி மேற்கண்ட ஒப்பந்தங்கள் ராணுவத்தின் தேவைகளுக்குப் “பொறுத்தமற்றதாகவும் உண்மைத் தன்மைக்கு மாறானதாகவும்” இருப்பதாகக் கூறியே நிராகரித்தார்.
கொள்முதல் குறைப்பு
பாஜக அரசின் இதுபோன்ற நிலைபாட்டின் காரணமாகவும், பட்ஜெட்டில் ராணுவத்திற்கான ஒதுக்கீட்டில் நிலவும்பற்றாக்குறை காரணமாகவும் கடந்த 2018-ஆம் ஆண்டுபிபின் ராவத் ராணுவத் தளபதியாக இருந்த போது ஆயுதங்களின் கொள்முதலை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.அன்றைய நிலையில் ராணுவத்திற்குத் தேவையான துப்பாக்கிகளின் எண்ணிக்கை 8 இலட்சமாகும். ஆனால், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி நிலைமையிலிருந்து வெறும்2,50,000 மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது; அதிவிரைவு படைக்கள வீரர்களுக்குத் தேவைப்படும் SIG – 716ரகத் துப்பாக்கிகளானது - படைக்களத்தில் முன்களத் துருப்புகளாக செயல்படும் வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது; அமைதியைப் பேணும் பணியில் ஈடுபடுத்தப்படும் நிலைத்ததுருப்புகளுக்கு வழங்குவதற்காக ரஷ்ய நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் AK – 203 ரகத் துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான ஆயுதத் தளவாட தொழிற்சாலையை அமேதியில் அமைத்திடவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காகரஷ்ய நிறுவனத்திற்கு பெரும் ராயல்டி மற்றும் உரிமத் தொகை வழங்கிட நிர்பந்தம் செய்யப்பட்டது.
இதேபோல் 2,50,000 சிக் சாவர் ரகத்துப்பாக்கிகளை தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு பின்னர் 2019-ஆம் ஆண்டு 72,400 - துப்பாக்கிகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன் இதில், 66,400 - துப்பாக்கிகள் தரைப்படை ராணுவத்திற்கும், கப்பற்படைக்கு 2000-மும், விமானப்படைக்கு 4000-மும், கொள்முதல் செய்யப்பட்டன. மேலும், 72000 துப்பாக்கிகளை 780 கோடிக்கு வாங்கிட முடிவு செய்யப்பட்டது; அப்போதும் கூட மேற்கண்ட ரகத்தைச் சேர்ந்த 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது என்பதே நிதர்சனமாகும்!இதுதவிர மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் லஷ்மண் பெஹ்ரா பாதுகாப்புத்துறை நிதி நிலைமை பற்றி சுருக்கமான எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள அறிக்கை கூறுவதாவது:
பாஜக-வின் இரட்டை வேடம்!
2009-10-ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பட்ஜெட்டுக்கான தொகையானது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 16 சதவீதமாக இருந்ததை பாஜக II அரசு 2018 -19காலத்தில் 13 சதவீதமாகக் குறைத்தது. இதன் பின் விளைவாக பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கென ஒதுக்கும் நிதியானது சுருக்கப்பட்டது. அதே நேரத்தில் பாதுகாப்புத் துறைக்கென ஒதுக்கும் தொகையில் 49 சதவீதத்திலிருந்து61 சதவீதமாக ஒய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகளுக்கான ஓய்வூதியத்திற்கு மட்டும் செலவழிக்கப்பட்டது. ஓய்வூதியத் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. ராணுவத்தின் நேரடி போர்க்கள நடவடிக்கைகளில் ஈடுபடும் முப்படையைச் சேர்ந்த வீரர்களுக்கு தேவையான நவீன ஆயுதங்களை வாங்குவதற்கு போதுமான நிதியை ஒதுக்காத பாஜக அரசு ராணுவத்தின் உயர்நிலையில் உள்ள அதிகாரிகளுக்கான ஓய்வூதியத்திற்கு மட்டும் பல மடங்கு நிதியை வாரி வழங்குகிறது!
மோடி அரசின் இந்தப் பாகுபாடான அணுகுமுறைக்குப் பின்னால் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக ராணுவத்தில் உள்ள வர்க்கங்களின் நலன் ஒளிந்திருக்கிறது. ராணுவத்தில் அமலாக்கப்பட்ட ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்திட்டமும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளும், ஊதிய உயர்விற்கு காரணமென்றாலும் கூட, ஓய்வு பெற்றமூத்த ராணுவ அதிகாரிகள் பலரும் பாஜக-வில் ஐக்கியமானநிகழ்வுகளின் மூலம் இதனை பாஜக-வின் அரசியல் முழக்கமாகவும், அவர்களது கோரிக்கையை உணர்ச்சி மேலிடும் பிரச்சனையின் கோணத்திலும் கையாண்டு ராணுவத்திலுள்ள உயர் அதிகார வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தும் கைங்கர்யத்தையும் மோடி அரசு செய்தது.அதே நேரத்தில் 2019-20-ஆம் ஆண்டில் 1 கோடியே 78 ஆயிரத்து 248 கோடி மூலதன செலவினத்தில் , ராணுவத்திற்காக வெறும் 33 ஆயிரத்து 462 கோடியை மட்டுமே வழங்கிட அரசு முன் வந்தது. ஆனால், ராணுவத்தின் தேவை 50 ஆயிரத்து 373 கோடியாகும். ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி ஒதுக்கப்பட்ட தொகையோ26,000 கோடி மட்டுமே; இதுதான் ராணுவத்தை நவீனமயமாக்கிட மோடி அரசு நிதி வழங்கும் லட்சணமாகும்!
தற்போது நிலவும் கோவிட் - 19 பேரிடர் காலச் சூழலின்பின்னணியில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக அரசு ராணுவத்திற்காக ஒதுக்கும் செலவினத்திற்கான தொகையில் 2020 - 21-ம் ஆண்டின் முதல்கால்பகுதியில் 20 சதவீதம் குறைத்து விட்டதாக ராணுவத் தலைமை தளபதி எம்.எம். நரவானே கூறியுள்ளார். இவ்வளவுக்கும் அந்த நேரத்தில் தான் சீனாவுடன் லடாக்கில்எல்லைப் பிரச்சனை தீவிரமடையத் துவங்கியிருந்தது.இவற்றையெல்லாம் விட 15-ஆவது நிதிக்குழு ஆணையம் 2019 - ஜூலையில் நிதிப்பற்றாக்குறையை சமாளித்திடபல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தது. அதில் முக்கியமாக “ராணுவம் மற்றம் உள்நாட்டு பாதுகாப்புக்கென தனி நிதியத்தை உருவாக்குவதும் அதற்கு செயல்வடிவம் கொடுப்பதும் அவசியமாகும்” எனவும் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், ராணுவத்தின் தற்போதைய நிலையானது “1999-ல் கார்கில் போரின் போது பாகிஸ்தானுடன் என்ன வகையான ஆயுதங்களைக் கொண்டு சண்டையிட்டோமோ, 20 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதி நவீனஆயுதங்களைக் கொண்டுள்ள சீனாவை எதிர்கொள்ள அதே பழைய ரக ஆயுதங்களை தான் நாம் இன்னமும் நம்பியுள்ளோம்! ” என அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த வி.பி. மாலிக் தற்சமயம் கூறியுள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் நிழலில் இந்தியாவா?
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்தியா - அமெரிக்காவுடன் ராணுவ ரீதியிலான ‘அடிப்படை பரிவர்த்தனைகள் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA – Basic Exchange& Co-operation Agreement) என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்களான சீத்தாராம் யெச்சூரி மற்றும் து.ராஜாவெளியிட்டுள்ள கூட்டறிக்கையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அந்த அறிக்கையில் “இந்தியா -அமெரிக்கா இடையிலான இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய ராணுவம் அமெரிக்காவின் ராணுவம் மற்றும் போர்த் தந்திர நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் தகவல் தொடர்பு முறைகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு இனி முழுமையாகத் தெரியவரும் என்பதனால் நம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ராணுவ ரீதியாக சுயமாக முடிவுகள் மேற்கொள்வது ஆகியவை கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் இந்தியாவைஅமெரிக்காவின் ஆயுதப்படைகளைச் சார்ந்திருக்கும் ஒரு நாடாக மாற்றியமைத்திருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி பார்த்தால், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்குவதில் பாஜக II அரசுக்கு உள்ள அலட்சியமும், ராணுவ ரீதியில் அமெரிக்காவுடன் நெருங்கிச் செல்லும் சார்புத் தன்மையும், சர்வதேச நிதி மூலதனத்திடம் இந்திய நாட்டு மக்களை அடிமைகளாக ஒப்படைப்பு செய்யும் காரியமின்றி வேறென்ன?
கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
தகவல் ஆதாரம்: தி கேரவன் ஏடு, அக்டோபர் இதழ்